சமூகத்தில் ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தாமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனைவிடுத்து மருத்துவ உதவியை நாடுவதே சிறந்த தெரிவாக அமையும்.
இன்றைய நாட்களில் சமூகத்தில் ஒமிக்ரோன் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் காய்ச்சல் 48 மணிநேரங்களுக்கு மேல் நீடிக்கும் சந்தர்ப்பங்களில் வைத்தியரை உடனடியாக நாடுவதற்கு முன்னுரிமையளியுங்கள்.
இதேவேளை, கொவிட் தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதைகளை மற்றும் வதந்திகளை நம்பாமல் அனைவரும் விரைந்து செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.